Thursday, November 6, 2008

சூன்யக்காரனும் படுகொலைகளும்


உலகின் ஏதாவது ஒரு மூலையில் படுகொலைகளும், அக்கிரமங்களும் நடக்கும் பொழுதெல்லாம் மனம் உளவியல் ரீதியாகவும், அறிவு பூர்வமாகவும், ஆன்ம தேடலுடனும் கடவுள் சார்ந்த கேள்விகளை எழுப்ப ஆரம்பித்து விடுகின்றது.

முதலில் எதற்காக அப்பாவி மக்கள், குழந்தைகள், பெண்கள் கொல்லப்பட வேண்டும் ? கடவுளே உலகத்தின் நடப்புகளை தீர்மானிக்கின்றார் என்றால் .... ,
உயிர் கொடுப்பதும் எடுப்பதும் அவன் இஷ்டம் செயல் என்றால்.... ,
நாம் அனைவரும் அவன் கையினில் அகப்பட்ட பொம்மையா ?
இந்த குரூர விளையாட்டு எதற்காக ?.

பிரதிநிதித்துவத்தின் வாயிலாக தன்னை அறிதலுக்காவே ,கடவுள் இந்த விளையாட்டை விளையாடுகின்றார் என்றால், மனித இனத்தை படைத்தது முதல் எத்தனை, எத்தனை கோடானுகோடி உயிர்கள் கடவுளின் இந்த அறிதலுக்காக அழிந்து போய் இருக்கின்றன ?

கடவுள் நம்ம உருவாக்கியது நம்மை நாம் அறிந்து ,கடவுளையும் அறிந்து ஞானம் பெற்று அதன் வாயிலாக ஞானம் பெறாத மக்களை வழிப்படுத்த என்றால் ,எத்தனை லட்சம் ஞானிகள் எத்தனை கோடி மக்களை வழிப்படுத்தி விட்டார்கள்.ஆனால் அடுத்து என்ன நடந்தது ? அதற்க்கு அடுத்து தோன்றிய ஞானம் கெட்ட மனிதனுக்கு இந்த மறைந்து போன ஞானிகளால் என்ன பிரயோஜனம்?
மறுபடியும் ஞானம் தேடுதல், மறுபடியும் ஞானம் கொடுத்தல்... கொடுத்தல், தேடல், கொடுத்தல் ,அழிதல், தேடல் ,........தீராத விளையாட்டு இது...


சரி, இது மாதிரி அல்ல கடவுள். அவன் வினை, எதிர் வினை தத்துவங்களுக்கு அப்பர்ப்பட்டவன் என்றால் இந்த மாதிரி ஒரு வினைகளற்ற , பிடிப்பில்லா கடவுளினால் என்ன பிரயோஜனம் நமக்கு ?

மொத்தத்தில் கடவுள் என்று ஒருவன் இருந்தால் அவன் தான் சுயநலத்தின் பிறப்பிடம் . தன்னுடைய சுயத்தை அறிய நாம் எல்லாம் அவனுக்கு பகடை காய்கள் .

இப்படி எல்லாம் விளையாடி கடைசியில் அவனுக்கு என்ன மிஞ்சுகிறது ??
இப்படி எல்லாம் பூமியில் மனித இனம் தோன்றியது முதல் ஞானம் பெற்ற கோடி ஞானிகள் அவனுக்கு போத வில்லையா ?? இன்னும் எதை அவன் மனம் தேடுகிறது ?
மனம் அற்ற நிலை உடையவன் அவனானால் , எதை கொண்டு அவன் தேடுதல் முழுமை அடையும் ?

முழுமை அடைந்த்தவன் அவன் என்றால் ஏன் இந்த தீராத விளையாட்டு ??

மேலே தோன்றியனா எல்லாம் சமூக அக்கிரமங்கள் , மற்றும் கொடூரங்களை முன் நின்று எதிர்க்க கையாலாகாத்தனத்திற்கு ,சால்ஜாப்பு சொல்ல வந்த கடவுள் பற்றிய தேடலின் கேள்விகள் என்று வைத்து கொள்ளலாம்.

கீழே வருபவை, அதன் தொடர்ச்சியாக கடவுள் சார்ந்த இன்ன பிற மூட தத்துவங்கள் மீது எழும் கேள்விகள்

மாந்த்ரீகம் : இது உண்மை என்றால் ஏன் ஒரு நாட்டின் தலைவனோ , தலைவியோ அவனை எதிர்க்கும் இன்னொருவனுக்கு ஏவல், சூன்யம் செய்தோ அல்லது
வசியப்படுத்தியோ பெரிய போரையும் ,ரெண்டு பக்கமும் நிகழும் வீண் உயிர் , பொருள் இழப்பையும் தடுக்க கூடாது

இது மட்டும் உண்மை'ன்னா ராஜபக்ஷே'க்கு சூன்யம் வச்சு அலேக்கா தமிழ் ஈழத்த வாங்கிடலாமே ...

ஏன் இந்த மாதிரி மந்திர தந்திர வேலைகள் மிகப்பெரிய விஷயங்களுக்கு பயன் படுவதில்லை. நம்ம பக்கத்து வீட்டுகாரகள் , தெரிந்த, தெரியாத அப்பாவி ஜனங்களோடு மட்டுமே தன்னுடைய சக்தியின் எல்லையை நிறுத்தி கொள்கின்றன ?

பேய்,ஆவி : புஷ் உட்பட அமெரிக்க ஜானதிபதிகள் ஒரு வருடத்திற்கு போடும் கொலை ஆணைகள் மட்டும் பல ஆயிரங்களை தாண்டும். எங்கே போகின்றன இத்தனை பேருடைய ஆவிகள்..ஏன் இவை பேயாக மாறி புஷ்ஷையும் , ராஜபக்ஷேய்வையும் , ஆப்பிரிக்க கொடுங்கோல் தலைவர்களையும், சர்வாதிகாரிகளையும் புடித்துக் கொள்வதில்லை ?
இவுங்கள்ட்ட என்ன பயமா ஆவிகளுக்கு ? அப்போ நம்ம மட்டும் இளிச்சவாயனுங்க ஆவிகளுக்கு கூட !!!!!!


வாஸ்த்து, ஜோதிடம், எண் கணிப்பு ஏனையப்பிற : இவை அனைத்துமே ஒரு மிகப்பெரிய வெளியில் விளையாடும் probability விளையாட்டு. நிறைய permutations and combinations. தொண்ணூறு சதவிகிதம் தப்பாகவே நிகழும். மீதி பத்து சரியாக நிகழ்வதும் இந்த தொண்ணூறு சதவிகிதத்தின் எச்சமே. இதை எல்லாம் சரிக்கட்ட இன்னு நிறைய generalizations. எல்லாருக்கும் ஏற்ற ஒன்றை எல்லாருக்குமே சொல்வது . உதாரணம் கிழக்கு பக்க வாசல், 9 நம்பர் ரொம்ப சக்தி வாய்ந்ததுங்க .


செல்வம் கொழிக்கும், அள்ளி தெளிப்பாய் என்று ஆருடம் கேட்ட எத்தனையோ போராளிகள்,அப்பாவி மக்கள் இன்று மண்ணோடு மண்ணாகி விட்டார்கள் ஆருடம் சொன்ன ஆசாமிகளோடு .

எத்தனையோ மாந்த்ரீக, தந்திரங்களை தங்கள் வாழ்க்கையோடு பல ஆயிரம் ஆண்டுகளாக பின்னி பிணைந்து கொண்டு, அதனால் நொந்து நசிந்து வாழ்ந்த சீனர்கள், ரஷ்யர்கள், ஐரோப்பியர்கள் எல்லாம் , இன்று இவற்றை கடவுளோடு சேர்த்து பின்னுக்கு தள்ளிவிட்டு உடல்,பொருள் சார்ந்த கோட்பாடுகள் அடங்கிய வாழ்க்கை முறையோடு மிக சிறப்பாக வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

பாவ,புன்னியத்திலான வாழ்க்கையை உதறி விட்டு சரி,தவறுகள் அடங்கிய வாழ்க்கை முறையே மனம் ,உடல் இரண்டிற்கும் நல்லது என்ற தத்துவமே மிக சிறந்தது.

இப்படியான வாழ்க்கை முறை கடவுள் சார்ந்து இல்லாமல் இருப்பதோடு , அதனை சார்ந்து எழும் நிறைய வாழ்வியல் குழப்பங்களையும் இல்லாமல் ஆக்கிவிடுகிறது.

ஆனால் This Dilutes the life more and reduces the spiciness and beauty of life.

சுருக்கமாக சொல்லப்போனால் கடவுள் என்ற தூணுக்கு நாம் தேவை இல்லை.
நமக்கு தான் சாய்வதற்கும்,நெடு நேரம் சும்மா நிற்பதற்கும் அது தேவை ...

Sunday, November 2, 2008

தமிழ் சினிமா - இட்லி, கறிக்குழம்பு .



சினிமா கண்டுபிடிச்சதுக்கு அப்புறம் உலகத்துல பொறந்த எல்லா தமிழனையும் போல நினைவு தெரிஞ்ச காலத்துல இருந்து தமிழ் சினிமா தான் நம்ம வாழ்க்கையோட பரிணாம வளர்ச்சிக்கு (???) உறுதுணையா இருந்துருக்கு.

நான் பார்த்த படம் மட்டும் ஆயிரக்கணக்கில இருக்கும்.அல்லது நூத்துக்கணக்கில !!!!
ஒரு காலத்துல எந்த படத்த அன்னைக்கு பார்கிறேனோ, அந்த படத்தோட ஹீரோவா அன்னைக்கு ராத்திரி அதே ஹிரோயினியோட, அதே ஷூட்டிங் லொகேஷன்ல கனவுல கும்மி அடிக்குது வழக்கமா இருந்து இருக்கு.

இன்னைக்கு நினைச்சு பார்த்தா எனக்கு நானே கோமாளி பட்டம் கட்டிக்கலாம்.


1.
) எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா? என்ன உணர்ந்தீர்கள்?

வயசு எல்லாம் கரக்கிட்டா தெரியலை ... எங்க வூட்ல எல்லாரும் ரஜினிகாந்த், விஜயகாந்த் பைத்தியங்க. அதுலேயும் எங்க அம்மாவுக்கு ரஜினிகாந்த் படம்' ன்னா உயிர். மொதமொதல்ல மதுரை சென்ட்ரல் தியேட்டர்ல மாப்பிள்ளை படத்துக்கு, தூக்குவாளில இட்லி கறிக்கொழம்பு எல்லாம் கட்டிக்கிட்டு , எங்க பக்கத்து வூட்டு அக்கா, அவுங்க பொண்ணு , எங்க மாமா பையன் எல்லாரெயும் கூட்டிகிட்டு,பெஞ்சு டிக்கெட் வாங்கி அம்மா கூட ரசிச்சு படம் பார்த்தது, எப்போடா இண்டெர்வல் வரும் கறிக்கொழம்போட இட்லி' சாப்பிடுவோம்னு தவிச்சது , சும்மா இருடா அனத்தாமன்னு சொல்லி, எங்க அம்மா முக்கா வாசி இட்லியையும் கறிக்கொழம்பையும் , பக்கத்து வீட்டு பொண்ணுக்கே ஊட்டி விட்டது. நானும் எங்க மாமா பையனும் வெறுப்பாகி அழுது ஆர்பாட்டம் பண்ணி கோன் ஐஸ்கிரீம் வாங்கித்தின்னது (அந்த பொண்ணுக்கு கொடுக்காம ) ,அப்புறம் அடுத்த நாள் ரஜினி மாதிரியே என்னை நினைச்சிக்கிட்டு, கிளாஸ்' இருக்கிற எல்லாருக்கும் கத்திக்கப்பல் செஞ்சதுக்காக, கனகா மிஸ் என்னை சாரி கேக்க சொல்ல , கேக்க மாட்டேன்னு சொல்லி (அவுங்க ஸ்ரீவித்யா நாம ரஜினி 'ன்னு நினைப்பு ) ஓவரா ஹீரோயிசம் விட்டு செம மாத்து வாங்கினது, எல்லாம் எனக்கு மறக்குதோ இல்லையோ , எங்க அம்மாவுக்கும் கனகா மிஸ்ஸுக்கும் மறக்காது .

என்ன உணர்ந்தேனா ?? ஒரு மண்ணும் உணரல ... ..அம்மாகிட்ட அடுத்த படத்துக்கு போறதுக்கு முன்னாடியே கறிக்கொழம்பும் , சோறும் ஒரு தடவ வீட்லியே வாங்கி சாப்பிடனும்'ன்னு தான் அப்போதைக்கு உணர்ந்தேன்.


2)
கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
விருமாண்டி....3 தடவ தியேட்டர் ' .. தீவிர ரஜினி ரசிகர்கள் நிறைந்த குடும்பத்துல பொறந்த நானும், எங்க அண்ணனும் வெறித்தனமான கமல் ரசிகர்களா ஏன் மாறினோம் ?எப்படி மாறினோம்'ன்னு ரூம் போட்டு தான் யோசிக்கணும்


3)
கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
சுப்ரமணியபுரம். இந்தியா போனவுடன இந்த படத்த நம்ம ஊர்ல (மதுரைங்க எங்க ஊரு ) தியேட்டர்'லே பார்க்கணும்னு நினைச்சு, அதே மாதிரி ஊருக்கு போயி டிக்கெட் எல்லாம் ரிசர்வ் பண்ணி வச்சு ...அதான் டிக்கெட் இருக்கே, லைட் 'சரக்கடிச்சிட்டு போகலாம்னு தண்ணிய போட்டு வண்டிய ஒட்டி குப்புற விழுந்து படத்துக்கு போகாம ஆஸ்பத்திரிக்கி போனப்போ, இனிமே எந்த படத்துக்கும் ரிசர்வ் பண்ணி டிக்கெட் எடுக்க கூடாதுன்னு உணர்ந்தேன்.


4)
மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா?

அன்பே சிவம். கமல் கடைசி காட்சியில மழை' நடந்து போகும் பொழுது அந்த நாயும் ஓடி வருமே, அப்போ ரொம்ப நேரம் அழுதுட்டு, உடனே அடுத்த ஷோ'க்கு கவுண்ட்டர்'லே டிக்கெட் வாங்கி வந்து, கடைசி பத்து நிமிஷம் முழுக்க அழுதுட்டே படம் பார்த்தது...

ஏன்ங்க அந்த படம் ஓடலை ?

5.
உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-அரசியல் சம்பவம்?
நம்ம ஊரு சினிமா'வும் அரசியலும் ஒன்றோட ஒண்ணு கலந்தது ..
எல்லா படத்துலேயும் அரசியல் இருக்கும்,
அரசியல்ல
எல்லாம் நிறையவே நடிப்பு இருக்கு. இதுல எதை சொல்ல ???

தேவர் மகன் படம் வந்த நேரத்துல எங்க ஊர் முழுக்கு நிறைய கலவரம் அடிதடின்னு ,
அப்போ
ஒன்னும் புரியலை..இப்போவும் புரியலை.

)உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா-தொழில்நுட்ப சம்பவம்?

ராஜ பார்வை' அந்தி மழை பாட்டுல, கோட்டு ஓவியமா, அப்புறம் ஓவியமா இருந்து , அப்படியே காட்சியா விரியும் ,மரங்களுக்கு இடையில கமல் நிக்கிறது ...இன்னைக்கு வரைக்கும் வேற எந்த படத்துலேயும் அதுக்கு சமமா எந்த காட்சியும் தொழில் நுட்ப ரீதியா மனசுல பதியலை... கவிதையும், கற்ப்பனையும், தொழில் நுட்பமும் ஒரே புள்ளில இணைஞ்ச ஒரு காட்சி அது

6.
தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
வேற என்னங்க வேலை. என்னதான் பிரெஞ்சு , இத்தாலியன் படங்கள் எல்ல்லாம் பார்த்தாலும் மூளைக்கு கொஞ்சம் கொஞ்சம் கிளுகிளுப்பு ஊட்ட, நம்ம ஊரு கிசுகிசு, கசமுசா, எல்லாம்
கரெக்ட்
' ட்டா படிச்சிருவோம்.

7.
தமிழ்ச்சினிமா இசை?
தமிழ் சினிமா இசை' பத்தி ஒரு ரசிகனா என்னோடு கருத்து என்னனா .........
ஒன்னும் இல்லைங்கா

ரொம்ப சோகம் இல்லாத, கேட்டா கொஞ்சமாவது உற்சாகம் கொடுக்குற எல்லா பாட்டையும் கேப்பேன்..
திருவாசகமும் பிடிக்கும், டாக்ஸி டாக்ஸியும் பிடிக்கும்

உலக இசை பத்தி சொல்ல நிறையா இருக்கு.
ஒரு
நைட் கிளப், ராக் ஷோ விடாம போயி பார்த்து சரக்கு அடிக்குறோம்ல.

8)
தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா? அதிகம் தாக்கிய படங்கள்?

ஒரு
காலத்துல எங்க அப்பாகூட சேர்ந்து மௌன்ட் ரோடு' (மலையாள படமா போடுவாங்களே என்ன தியேட்டர்'ன்க அது, பேரு மறந்து போச்சு ) மம்மூட்டி, மோகன்லால் நடிச்ச நிறைய படம் பார்த்துருக்கேன் ...உபயம் அப்பாவின் மலையாள நண்பர்கள் ..
ஆனா ஒரு படமும் மனசுல நிக்கலை..ஏன்னா முக்கா வாசி படங்கள், நான் நேர்ல பார்த்த வாழ்க்கைய வேற கலாச்சாரப் பின்னணியோட திரைல பார்க்கிற மாதிரி இருக்கும்.

நம்ம தமிழ் படம் மாதிரி ,ஹீரோ பதினாறு பெற சட்டைல அழுக்கு படாம அடிச்சி தூள் கிளப்பிட்டு, ஹீரோயின்னோட அண்டார்டிகா' ஜகஜமா ஒரு சட்டை மட்டும் போட்டுட்டு, அந்தம்மா அது கூட இல்லாம பாடிட்டு இருந்தா மனசுல நின்னுருக்கும்.

ஹிந்தி படங்கள் நிறைய பார்த்தேன், பார்கிறேன். என்ன சுத்தமா யோசிக்கவே வேண்டியது இல்லை ஜாலியா படம் பார்த்துட்டு தியேட்டர்'க்கு வெளில வந்தா எல்லாம் மறந்து போயிடும்.

இப்போ சீன, கொரிய மொழி படங்கள் அதிகம். இந்த படங்களா எல்லாம் பார்க்கும் பொழுது தோணுறது ஒன்னே ஒன்னு தான், நம்மக்கிட்ட இத விட சொல்லப்பட வேண்டிய அற்புதமான கதைகள், தளங்கள், களங்கள் கொட்டி கிடக்கு...
என்ன ரூம் போட்டு யோசிக்காம ஊற சுத்தி பார்த்தா போதும்

பிரெஞ்சு , இத்தாலியன் , ரஷ்ய படங்கள் என்னமோ இப்போ பார்க்கிறது இல்லை ..ரொம்ப யோசிச்சு படம் எடுத்து நம்மலேயும் குழப்பி , அவனுங்களும் குழம்பி கடுப்பேத்திறானுங்க.பாதி இத்தாலியன்,பிரெஞ்சு , ரஷ்ய பட டைரக்டர் கள் ஏன் தற்கொலை பண்ணிக்கிறானுங்க'ன்னு இப்போ புரியுது.


9)
தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்? பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?

சிறிய தொடர்பு உண்டு. ஒரு படத்தயாரிப்பாளரோட மூணாவது நண்பரோட, நாலாவது நண்பர் என்ற முறைல.
சினிமா எடுக்க வேண்டிய learning by observing நிறைய இருக்கு ...
கூடிய சீக்கிரம் கொஞ்சம் மரை களண்டு , பார்க்கிற நல்ல வேலைய விட்டுட்டு இந்தியா' எதுனா ஒரு டைரக்டர்' கிட்ட .டி யா அழுக்கு ஜீன்ஸ் போட்டுகிட்டு , சோறு தண்ணி இல்லாம குப்பை கொட்டப் போறேன்னு , நிறைய பேரு WARNING message அனுப்பிட்டு இருக்காங்க.


10.
தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

என்னங்க காமெடி பண்றீங்க ??? எம்.ஜி.யார், சிவாஜி இல்லைனா ஒரு காலத்துல தமிழ் சினிமா'வே இல்லைன்னு இருந்தது.
ஆனா அவுங்க அவ்வுலகம் சென்ற பின்னாடி,
இவ்வுலகத்துல தமிழ் சினிமா இல்லாமையா போயிருச்சு

எதிர்காலம் புதிர்காலம்'ன்னு காமெடி பண்ணாதீங்கப்பா

11.
அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?

நமக்கு பிரச்சனை இல்லை ஹிந்தி,மலையாளம்,தெலுங்கு'ன்னு வேற மொழி படம் பார்த்து அட்ஜஸ்ட் பண்ணிக்கலாம். தமிழர்கள் நிலை என்னன்னு சொல்றது.???
இப்போவே நிறைய பேரு தியேட்டர்'க்கு போயி தமிழ் படம் பார்க்கிறது இல்லை.
எல்லாம் டி.வி.டி தான்...

வழக்கமா இங்கிலீஷ், ஹிந்தி படமா ஓட்டுற மல்டிப்ளெக்ஸ்' எல்லாம் எங்கள மாதிரி வாலிப வயசு பசங்க கூட்டம் வழக்கம் போல் நிரம்பி வழியத்தான் போகுது .

ஆனா நம்ம ஊரு அரசியல் வாதிங்க எல்லாம் பக்கவாத நோய் வந்த மாதிரி நொந்து போயிருவாங்க.

நம்ம முதல்வருக்கு நிறைய நேரம் மிஞ்சும். என்ன பண்ணுவாரு ?? குடும்ப சண்டைய தீர்த்து வைப்பாரா ? இல்லை கரண்ட் கட் ஆகம இருக்க திட்டம் போடுவாரா ? இல்லை M.p வாபஸ் , வாபஸ் இல்லை'ன்னு கேம் விளையாடுவாரா ?

கேப்டன் னுக்கும் பிரச்சனை இல்லை. ஏற்கனவே அவர் படம் நடிக்கிறதும், அதை மத்தவங்க பார்க்கிறதும் கம்மி தான்.

இந்த மாதிரி தமிழ் வளர்ச்சிய கெடுக்கிற மாதிரி கேள்வி கேட்டதுக்கு மருத்துவர் அய்யா , திரு.மா கிட்ட எல்லாம் உங்கள ஏன் போட்டு விட கூடாது ???


அப்பாடி ஒரு வழியா எல்லா கேள்விக்கும் பதில் எழுதியாச்சு !!!
அடுத்த தடவ கேள்வி கேட்டா "choose the best answer"மாதிரி சொகுசா கேளுங்கப்பா

யார்ட்ட அடுத்து இத ரவுண்டு விடலாம்னு பார்த்தா, நான் ரசிச்சு படிக்கிற வலை உலக பெரியவங்க எல்லாம் ஏற்கனவே இதை பத்தி எழுதிட்டாங்க.

நீங்க பதில் சொல்லுங்கன்னு சின்னப் பசங்கள்ட்டா கேள்வி கேக்குற அளவு, நான் பெரிய ஆள் இல்லை.

அதுனாலா எல்லா MLM 'ம்க்கும் கடைசில நடக்கிற கதைப்படி இதை இத்தோடா முடிச்சுக்குறேன்...

ஆட்டைய்யை
கலைசாச்சி டோய் , டும்! டும்! டும் .

Thursday, October 16, 2008

எப்படி எழுதுறானுங்க ?


ஆயிரத்தெட்டு வழி இருக்கு இன்னைக்கு எழுத. செரி நாமளும்
எழுதனும்னு ரொம்ப நாளா ஆசை. அதுக்காக ஒரு வலைப்பூவும் துவங்கியாச்சு.
ஆனா பல நேரம் என்ன எழுதுறதுன்னோ ,அல்லது எதுக்கு எழுதனும்னோ தோணுது

வாழ்க்கைல சுவாரசியம் இல்லாம இல்லை, அல்லது அனுபவத்துக்கும் பஞ்சம் இல்லை. ஆனா அதெல்லாம் ஏன் உன் எழுத்துல கொண்டு வரலைனா சொல்ல தெரியலை.

நிறைய பேரோட எழுத்துக்கள, புத்தகங்கள படிச்சி இருக்கேன்.
சும்மா ஒரு நூல் பிடிச்சபிலையோ அல்லது பல கலர் நூல கலந்து புடிச்சாப்பலையோ , நிறையவோ, கொஞ்சமாவோ எழுதிட்டு போயிறாங்க. படிக்கவும் நல்லா இருக்கு.


சிலர் வீடு மாத்தினது, புது வீடு எப்படி இருக்குதுன்னு எழுதுறாங்க.

சிலர் டாஸ்மாக்'ல கூட்டாளிகளோட தண்ணி அடிச்சத கொஞ்சம் பழைய காதல் தோல்வியோட கலந்து கவிதையா அழகா கதையா எழுதுறாங்க.

சிலர் புதுசா வந்த இளவயது காதலி பத்தியும், ஊடல் கூடல்கள பத்தியும் அற்புதமா எழுதுறாங்க.

சிலர் தான் கண்ட அல்லது சொல்லக்கேட்ட காமத்தை பத்தி தெளிவா எழுதுறாங்க.

சிலர் தான் பார்த்த, தனக்கு ஏற்பட்ட அனுபவங்கள, காயங்கள கொடுரங்கள எழுதுறாங்க

சிலர் சும்மா ஊற சுத்தி பார்த்து அத எழுதுறாங்க

சிலர் திரைப்பட விமர்சனமா எழுதுறாங்க

சிலர் எல்லாத்தை பத்தியும் அழகா குறிப்புகள் மாதிரி எழுதுறாங்க

சிலர் குளிக்கிறத பத்தி கூட எழுதுறாங்க

சிலருக்கு தொழில்நுட்பம், சிலருக்கு இசை , சிலருக்கு இச்சை , சிலருக்கு மொழி தத்துவம், சிலருக்கு கவிதை , சிலருக்கு மொக்கை , சிலருக்கு மதம் , சிலருக்கு மதவெறி , சிலருக்கு சமையல், சிலருக்கு சிந்தனை , சிலருக்கு பிரச்சாரம் ,சிலருக்கு பல விஷயங்கள் , இப்படி எத்தனையோ பல விஷயங்கள் எழுத இருக்கின்றன சிலருக்கு

எல்லாமே நிச்சயமாக எனக்கு ஏற்படுறமாதிரி விஷயங்கள் தான்
ஒரு சிலத படிக்கும் பொழுது, அட நம்ம சொல்ற மாதரியே இருக்கேன்னு தோணுது

ஆனா இதை அதை எல்லாம் ஏன் நான் எழுதலை ?

இந்த கேள்விக்கு எனக்கு நானே பல நேரம் சொல்லி, எழுத தோன்றிய எல்லாவற்றையும் எழுதாமல் விட்ட காரண பதில் ஒன்னே ஒன்னு தான்.

எதை நான் புதிது ,அறிவானது, அழகானதுன்னு எழுதினாலும் அது உலகத்தின் ஏதாவது ஒரு மூலையில் அரதப்பழசான, சொல்லி சொல்லி அலுத்து போன கதையாகத்தான் இருக்கும்.

அதை வேற எதுக்கு திருப்பி சொல்லணும்?

அப்படிப் பார்த்தா இங்க வாழ்ற பல மனுஷங்க ஏற்கனவே எவனோ ஒருத்தன் வாழ்ந்த்துட்டு போன வாழ்க்கைய தானே வாழ்ந்துட்டு இருக்காங்க

ரொம்ப புதுசா தான் மட்டுமே அனுபவிக்கிறதா, அழுகுறதா, சிரிக்குறதா நினைச்சு.


அப்ப ஏன் அதே வாழ்க்கைய ரொம்ப தனித்துவம் வாஞ்சதுன்னு சொல்லி திரும்ப திரும்ப வாழனும் ?

பதில் யார்கிட்ட இருக்கு வார்த்தைகள் இல்லாமல் நிதமும் நம்ம வாழ்க்கையோட கலந்து உறைஞ்சி போன இந்த கேள்விக்கு ???




P.S:
இருந்தா கொஞ்சம் எழுதுங்களேன்.


Thursday, September 25, 2008

காதல்'ன்னு ஒரு எழவும் கிடையாது

காதல்'ன்னு ஒரு எழவும் கிடையாது
சொன்னவர் பொய்யன்
அவருக்கு சொன்னது MR. ராமசாமி (பெரியாருங்க )
அத பார்த்து உங்களுக்கு சொன்னது நான்
நீங்க ?

சொன்ன மேட்டரு இங்க



நன்றி:
பொய்யன்.
இட்லி வடைய போட்டு வறுத்த மாதிரி என்னை வருத்துறாதீக !!!

Thursday, September 18, 2008

ஹே! ராம் ! - ஹிந்து முஸ்லீம் வன்முறை, கலவரக் கொடூரத்தின் சாட்சி. - தொடர்ச்சி.



திரும்ப ஹே-ராமிற்கு

இப்படியாகத் தொடர்கிறது இந்த பலி விளையாட்டு,காளிக்கும், அல்லாஹ்வுக்கும் ஏற்பட்ட இந்த மாய ரத்த பசி தீரும் வரை தாராளமாக பலி கொடுக்கின்றனர் மக்கள், அடுத்தவர் உயிர்களையும் , குழந்தைகளையும், பெண்களையும், வழமையாக கொடுக்கும் மிருகங்களுடன் சேர்த்து.

சில மணி நேரங்கள் ராமன் ராவணன் ஆகிறான், மன சாந்திக்காக கொஞ்சக் கொலைகள் , பித்தத்தில் கொஞ்சக் கொலைகள் செய்து . பின்னாளில் எவ்வளவு முயன்றும் அவனால் இந்த நினைவுகளில் இருந்து தப்ப இயலவில்லை. காரணம் ராமன் ஒரு நடுத்தர மனிதன்,அவன் காசுக்காக கொலை செய்யும் அன்றாடங்காச்சியோ, அல்லது குல சுத்தத்துக்காகவும், கொள்கைக்காகவும் கொலை செய்யும் மதவாதியோ இல்லை. எந்நாளும் அன்பை பொழியும் குடும்பமும் , காதல் தரும் ஆதர்ச மனைவியும் அமைந்தும் கூட இந்த பழியும், உணர்வும் முக்கி எடுத்த அமிலக்கரை போல அவனை விட்டு அழிய மறுக்கின்றது.
பலியும் அவனே! பலி கொடுக்கபட்டவனும் அவனே !


குஜராத்திலும் , காஷ்மீரிலும் ,ஈராக்கிலும், பாலஸ்த்தீனத்திலும் , பாகிஸ்தானிலும், மியன்மாரிலும், ஆப்பிரிக்காவின் அனேகமாக அனைத்து தேசங்களிலும், லட்சோப லட்சம் ராமன்கள் வாழ்வின் மன அமைதியை தொலைத்து விட்டு, திரும்ப இயலாத பாழ் இருவெளிக்குள், கொலை கூச்சல்களுடன் வாழ்ந்து கொண்டு இருக்கிறார்கள்.

அவர்களுக்கு இதை விட்டுத் திரும்ப வாய்ப்பும் இல்லை, அன்பையும், காதலையும் தர குடும்பமும், மைதிலியும் இல்லை...

அவர்களின் தலைவர்கள் அவர்களுக்கு வாக்களித்த அவர்களின் ஒரே விடுதலை திரும்ப இந்த கொடூர நிலையிலும், தொடரும் உயிர் பலியிலும் தான் உள்ளது.

இந்த கொலைக்களங்களும் பிற இனத்தை அளிக்கும் பரிசோதனைக் கூடங்களும் பூமிக்கு ஒன்றும் புதிதல்ல. எத்தானையோ முறை இப்படி இந்த பலி நிகழ்ந்து இருக்கிறது வரலாற்றில் ..எத்தானையோ முறை லட்சகணக்கான முஸ்லிம்கள், யூதர்கள்,கிருத்தவர்கள்,ஹிந்துக்கள் என்று அடையாளம் பூசப்பட்ட மக்களின் உய்ரிகள் உடைமைகள் அழிக்கப்பட்டன ..

பலி தான் அதிகமாகியதேத்தவிர, பலி கேட்ட கடவுள்களின் தாகமோ, பசியோ அடங்க வில்லை.

சரி இந்த கொலைகாரக் கடவுள்களை விட்டு விடுவோம் .அப்படியாவது இந்த பலி நிற்கட்டும் என்று பார்த்தால் கிளம்பி கொண்டு வந்து நிற்கின்றன வர்க்க பேதங்கள்.

பன்னாட்டு முதலாளித்துவம் ஏழைகளின் குருதியில் கிடைக்கும் போதையை, லாபத்தை விட தயாரில்லை.ஏழைகளும், தன்னுடைய உரிமையை முழுவதுமாக விட்டு கொடுக்க போவதில்லை. பணக்கார இனத்திற்கும், அதன் நிரந்தர லாப மூட்டையும் பகையுமான அடித்தட்டு இனத்திற்கும் நில்லாத , ஓயாத சண்டை உலகின் மூளை முடுக்குகளில் எல்லாம்.


ஒரு இன அல்லது வர்க்க மக்களை அழிப்பதன் மூலம் ,சுத்தமான ஒரு சமுதாயத்தை படைத்து விட முடியும் அல்லது, அவர்களை அடிமைகளாக்கி நிச்சயமான ஒரு ஆதிக்கத்தை அடைந்து விட முடியும் என்று நினைப்பவர்கள் மடையர்கள்.

இந்த இனம் அழிந்தால் இன்னொரு இனம் வரும் போராட, இந்த மதம் அழிந்தால் இன்னொரு மதம் வரும் எதிர்க்க, இந்த வர்க்கம் அழிந்தால் இன்னொரு வர்க்கம் வரும் சண்டைக்கு , இது உலகம் தோன்றியது முதல் நடந்து கொண்டு இருக்கும் ஒரு தொடர் விளையாட்டு.

உன்னுடைய மதத்தில் , இனத்தில்,குழுவில், வர்க்கத்தில் இருந்தே வருவார்கள் எதிர்ப்பாளர்கள்
முந்தைய அல்லாத மற்ற மதத்தை விட கடுமையாக எதிர்ப்பார்கள் உன்னை.
என்ன செய்ய முடியும் உன்னால்?

ஆதி காலத்தில் எத்தனை மதங்கள், எத்தனை பேதங்கள் இருந்தன?. பழைய மதத்தின் உள்ளுக்குள் இருந்தே பிரிந்து வளர்ந்து வந்தது தான் அத்தனை புதிய மதங்களும்.

இப்படி வந்த எல்லா மதவாதிகளும் சொல்லி வைத்தாற்போல் கேட்பது பலி .
ஏன் இந்த பலி ? மாறுபட்ட மதங்கள் தான் பலி கொடுக்க தூண்டுபவர்களின் பிரச்சனையா ? இது எப்படியென்றால் உன்னுடைய வீட்டில் பிறக்கும் உன் சகோதரன் , உன் வீட்டில் கொடுக்கும் சைவ உணவினை ஆண்டாண்டு காலமாக உண்டு வளர்ந்து, பின்னாளில் வேற ஒரு புது வீட்டிற்கு போய் தனது காதலியுடன் ,கறி சோறு தின்று கொண்டு இருந்தால் அது பாவம் என்று அதற்க்காக அவனைக் கொலை செய்து தீர்வு காண்பதை போன்றது . நாளை உன் மகன் அதே தவறை செய்ய மாட்டான் என்று என்ன நிச்சயம் ?

மதம் மாறுவது முழுக்கத் தவறு என்பது முட்டாள்த்தனம். உனக்கு பிடித்த இனிப்பு எனக்கு பிடிக்காது, எனக்கு பிடித்த புளிப்பு உனக்கு பிடிக்காது. அதுவும் இன்று தான் நாளை இந்த பிடித்தல் கூட மாறும் அது போலத்தான் மத மாற்றமும். அது மனதால், அறிவால் ஏற்படுதல் நலம் . காசுக்காகவும் பயத்திற்க்காகவும் மதம் மாற்ற பட்டால் ,அதன் மூல மதம் மாற்றுபவன் அடைவது என்ன? தன் மதத்திற்கு எண்ணிக்கை கூடுமே தவிர, இந்த மாதிரி கொள்கை அற்று மதம் மாறுபவர்களால் ஒன்றும் யானை பலம் வரப்போவது இல்லை. வரப்போவது எல்லாம் யானை விட்ட குசுவிற்கு சமானம். கொஞ்சம் நேரம் நீடிக்கும், அதுவும் கெட்ட வாசம் தான்.

சிந்தித்து பார்த்தால் எந்த கொள்கையும் வந்து எவனுக்கும் சோறு போட போவதில்லை.உழைப்பை தவிர! வேண்டுமானால் கூலிக்கு மாரடிப்பவர்களுக்குக் கொஞ்சம் காசு கிடைக்கலாம் ,ஆனால் அதுவும் நிலை இல்லாத ,நிம்மதி இல்லாத காசு. வட சென்னையின் குப்பத்து மக்களுக்கு தெரியும் நிம்மதியான காசின் அருமை.
இப்படி ஒரு வருமானத்தை தன்னுடைய மக்களுக்கு அளிப்பது அரசாங்கத்தின் கடமை

அப்படி அது தவறும் பட்சத்திலேயே கடவுள்களும் மிருகங்களும் பசியால் முழித்து கொண்டு பலி கேட்கின்றன
 

| இங்கிலீஷ்'ல |